Saturday, 26 January 2013

ஜென் தத்துவம்




 
 
ஒரு பெரிய பணக்காரனுக்கு பணத்தோடு, அதிகாரமும் இருந்தது. ஆனால் அவனுக்கு அனைத்தின் மீதும் இருந்த பற்று குறைந்து கொண்டே வந்தது. அவனது மனம் தத்துவ சிந்தனைகளை நாடியது. அதனால் தனது சிந்தனையை வளர்க்க எங்கு படிப்பது, யாரிடம் படிப்பது என்று நிறைய பேரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது பலரும் ஒரு ஜென் துறவியைப் பற்றி சொன்னார்கள். 
 
 
 அதனால் அவனும் அவரிடம் தனது அறிவை வளர்க்க சென்றான். அந்த துறவியின் காலில் விழுந்து, "ஐயா! எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெளிவாக சொல்லுங்களேன்" என்று கேட்டான்.
 
 அதற்கு அந்த துறவியும் "ஜென் தத்துவம் என்றால்..." என்று சொல்லி, உடனே அவனிடம் "நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா!" என்று கூறினார். அவனோ மனதில் "என்ன இவர் இப்படி சொல்கிறார், எனக்கு வந்தால் நான் போகமாட்டேனா? கொஞ்சம் கூட அறிவில்லாதவர் போல் சொல்கிறார்" என்று மனதில் புலம்பிக் கொண்டே, போய்விட்டு வந்தார்.
 
 
 அப்போது அந்த துறவி அவனிடம் "புரிந்ததா...?" என்று கேட்டார். அதற்கு அவன், "இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?" என்று கேட்டான். அவர் அதற்கு "எவ்வளவு பெரிய பணக்காரனாக அல்லது அரசனாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவனிடமோ, இல்லை ஏழையிடமோ அல்லது எத்தகைய மனிதனாக இருந்தாலும், இப்போது நீ செய்த வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். மேலும் எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அதிலும் அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும் " என்று சொன்னார். அதைக் கேட்ட அவன் வாயடைத்துப் போய்விட்டான். 
 
ஆகவே இந்த கதை நமக்கு என்ன சொல்கிறதென்றால், மனிதர்களுக்குள் எந்த ஒரு வேறுபாடும் இல்லை, அனைவரும் சமம் தான். மேலும் அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். அது மற்றவருக்கு இடையூறு தராத வகையிலும் இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home