Sunday, 20 January 2013

கடலை பருப்பு 'பேக்'- Channa Dal Beauty Pack

Channa Dal Beauty Pack - Beauty Care and Tips in Tamil
என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு "பேக்"......

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்.... இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

எண்ணெய் வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பரு தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலை பருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும்.

தொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்.... பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
முகம், உள்ளங்கை, அக்குள் என்று வியர்வை படியும் இடங்களில் பூசிக் குளிப்பதற்கென்றே அசத்தலான வாசனை வைத்தியம் இருக்கிறது கடலை பருப்பில்.

கடலை பருப்பு அரை கிலோ, துண்டங்களாக்கிய வெட்டிவேர் 10 கிராம். கிழங்கு மஞ்சள் 10 கிராம்.... இந்த மூன்றையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக்கி, தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதுபோல், உடம்பு முழுவதும் பூசி குளித்து வர, வியர்வை தொல்லை இனி இல்லை என்ற சந்தோஷ சிறகடிக்கலாம்.
தலை கசகசவென வியர்த்துக் கொட்டி, கூந்தல் எப்போதும் பிசுபிசுப்புடன் மங்கலாகவே இருக்கிறதா? பளபளக்கிற ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் நாம் கொடுத்துவைக்கவில்லை என்று கவலைப்பட்டது போதும். உங்களுக்கே உங்களுக்கான சிறப்பு கடலை பருப்பு சிகிச்சை இதோ...
கடலை பருப்பு அரை கிலோ. வெட்டி வேர் 10 கிராம். உலர்ந்த செம்பருத்திப்பூ 200 கிராம்... இந்த மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடருடன் கற்றாழை ஜெல்லை குழைத்து, தலையின் எல்லா பாகங்களிலும் படும்படி "பேக்" ஆகப் போடுங்கள். பத்து நிமிடம் கழித்து, தலையை நன்றாகத் தேய்த்து நிறைய தண்ணீர் விட்டு அலசுங்கள்.
இதை வாரம் இரு முறை செய்துவந்தால், பிசுபிசுப்பு நீங்கி, கூந்தல் பளபளக்கும்.

உச்சந்தலை, முன்பகுதி, வகிடு போன்ற "தலை"யாய ஏரியாக்களில் முடி உதிர்ந்து மண்டையோடே பலருக்கு வெளியே தெரியும். வயதை சற்றே அதிகரிக்துக் காட்டுகிற இந்தத் தோற்றத்தை யார்தான் விரும்புவார்கள்? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது, கடலை பருப்பிடம்!
கடலை பருப்பு 2 டீஸ்பூன். கசகசா அரை டீஸ்பூன். கொட்டை எடுத்த புங்கங்கொட்டை தோல் 3. வெங்காயச்சாறு 1 டீஸ்பூன் அல்லது 3 சின்ன வெங்காயம்.... இவற்றை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். முடி உதிர்ந்த பகுதிகளில் இந்த விழுதை வைத்து 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, பிறகு அலசுங்கள்.
வாரம் இரு முறை இப்படிச் செய்து வர. முடி உதிர்வது நின்று கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி முளைக்கும்.

தேமலும் கரும்புள்ளிகளும் அழகைக் கெடுக்கும் அரக்கர்கள்! இவர்களை விரட்டியடிக்கவும் வழி வைத்திருக்கிறது கடலை பருப்பு.
கடலை மாவு 1 டீஸ்பூன். பசு மஞ்சள் விழுது 1 டீஸ்பூன், தேன் 1 துளி, எலுமிச்சைச்சாறு 4 துளி இவற்றை பேஸ்ட் போலாக்கி, தேமல் உள்ள பகுதியில் பூசி, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இப்படி செய்து வந்தால் கரும்புள்ளியும் தேமலும் இருந்த தடம்கூடத் தெரியாமல் தேகம் மின்ன, "யார் இந்த தேவதை?" என்று ரகசியம் பேசுவார் உங்களவர்.

கழுத்தைச் சுற்றிலும் சிலருக்கு கறுப்பு கறுப்பாக வளையம் விழுந்து கவலை வளையத்தை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு.
கடலை பருப்பு கால் கிலோ, பார்லி கால் கிலோ இரண்டையும் தனித்தனியே அரைத்து வையுங்கள். இரண்டிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் பொடியாக்கிய பச்சை கற்பூரத்தை கடுகளவும் , முல்தானி மட்டியை 1 சிட்டிகையும் சேர்த்து, கழுத்தைச் சுற்றி பூசி காய்ந்ததும் அலசுங்கள்.

தினமும் இதைச் செய்து வர, கழுத்து "வரி"கள் காணாமல் போய்விடும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home