Sunday, 24 February 2013

அழகான கன்னங்கள் பெற!Beautiful cheek

Beautiful cheek - Beauty Care and Tips in Tamil
பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்.

பருக்கள் வராமல் தடுக்க:-

பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொருத்த வரையில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகையப் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறதே என்பீர்கள் உண்மைதான். எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

முகப்பருக்களும் பல வகைகளில் தோற்றம் அளிக்கின்றன. சிறியதாக தோன்றுதல், சிழ்கட்டுதல், வலி ஏற்படுத்துதல், ரத்த சிவப்புடன் காணப்படுதல் இப்படி முகப்பரு வந்துவிட்டால் அதனை முறைப்படி போக்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர முறையற்ற வழிகளில் அதனைக் கையாளக் கூடாது. முகப்பரு வந்துவிட்டால் அழகுக் கலை நிபுணரிடம் வந்து அதற்குரிய ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தரும் ஆலோசனைப்படி முகத்தைப் பராமரிக்க வேண்டும்.

வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

ரத்த சந்தன பவுடர் கடைகளில் கிடைக்கும். அதனைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.
அழகு நிலையத்துக்கு வராமல் சுய சிகிச்சை என்ற பெயரில் முகத்தை வடுவாக்கிவிடும் பெண்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முகப்பருவைக் கிள்ளிவிடுவது, முரண்பாடான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது எலுமிச்சைப் பழத்தை முகத்தில் அழுத்தித் தேய்ப்பது போன்றவைகளால் முகத்தை ரணமாக்கிவிடுகிறார்கள். சிலருக்கு ரணமாக்கப்பட்ட முகப்பருக்கள் ஒரே இடத்தில் இருந்தால் முகத்தில் ஒரு பாம்பு புற்று போல தோன்றும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க:-

இதற்கு சுயமாக செய்யும் வழிமுறைகள் எதுவும் முழுபலன் தருவதில்லை. அழகு நிலையங்களில் சிகிச்சை பெறுவதே சிறந்தது.
பலபெண்களின் மாசற்ற அழகு முகத்தில் மரு ஏற்பட்டு அவர்களது அழகைக் கெடுத்துவிடுகிறது. பாரம்பரிய ரீதியில் 90 சதவீதம் பேருக்கு மரு ஏற்படுகிறது. அப்பா அம்மாவுக்கு இருந்தால் மகளுக்கு ஏற்படுகிறது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்டாலும் மரு தோன்றக்கூடும். பாலுன்னி என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.
மருவில் உயிருள்ளது உயிரற்றது என்று இரண்டு வகை உண்டு. உயிரற்றவைகளை நீக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அவை மீண்டும் தோன்றவும் செய்யாது. உயிருள்ள மருக்களையும் இப்போது எளிதாக நீக்கிவிடும் நவீன சிகிச்சைகள் உள்ளன. வலி ஏற்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை.

முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:-

முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு வடு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சைக் கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனைக் குணப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

இயற்கை அழகு சிகிச்கை:-

ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கும் பாரம்பரியம் ஒரு முக்கியக்காரணம் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைத் தேய்துக் குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home