Monday, 11 February 2013

தண்ணீர் தேசம் - பத்தொன்பதாம் பாகம்



அழுவதா? ஆனந்தப்படுவதா?

கைவசம் இருந்த
கடைசிநெருப்பு அணைந்து
போனதற்காக அழுவதா?

அவர்களின் உயிரை ஊறவைக்கும்
தண்ணீரால் பாத்திரங்கள்
நிறைந்து வழிவது பார்த்து
ஆனந்தப்படுவதா?

ஒன்றை இழந்துதான்
இன்னொன்றா?
இயற்கை இட்ட சட்டம்
இதுதானா?

அனுபவம் வேண்டுமா -
இளமையை இழ...
ஆயுள் வேண்டுமா - போகம்
இழ...

கவிதை வேண்டுமா-உன்னை
இழ...
காதல் வேண்டுமா -
இதயத்தை இழ...

வளர்ச்சி வேண்டுமா -
தூக்கத்தை இழ...
வரவு வேண்டுமா -
வியர்வையை இழ.

ஒன்றை இழந்துதான்
இன்னொன்று.

அவர்கள் அணைந்துபோன
தீப்பந்தத்துக்காக
அழுவதாயில்லை.

மழை - உடம்பிலிருந்த உப்புப்
பிசுக்கையும் உள்ளத்திலிருந்த
கண்ணீர்ப் பிசுக்கையும்
ஒருசேரக் கழுவி விட்டதில்
அவர்கள் ஆனந்தமே
அடைந்தார்கள்.

ஆகா.
உடம்பில் தண்ணீர் விழுந்தால்
உயிர் நனைந்து போகுமோ?
பீப்பாய்த் தண்ணீரை
அவர்கள் வாரிவாரிக்
குடித்ததில் வயிறு முட்டியது.

மழை நின்றுவிட்டது.
நனைந்த ஆடையைப் போலவே
உடம்பும் வாடைக்காற்றில்
வெடவெடவென்று ஆடத்
தொடங்கியது.

அய்யோ. என்னை
நனையவைத்து நடுங்கவைத்து
விட்டீர்களே.

கலைவண்ணன் சிரித்தான்.

கண்ணை முடாமல் தும்ம
முடியுமா? தண்ணீர் படாமல்
குளிக்க முடியுமா? எங்கே உன்
ஆடை கொடு. நான் பிழிந்து
விடுகிறேன். ஒரு மிச்சப்
பாத்திரத்தில் அதையும்
பிடித்துக் கொள்கிறேன்.
பிறகு, நானே அதைக்
குடித்துக் கொள்கிறேன்.
முலிகைகளை மோதிவரும்
தண்ணீருக்கே நோய்தீர்க்கும்
குணமுண்டாமே. உன்னைத் தடவி
வந்த தண்ணீருக்கு
என்னை உயிர்ப்பிக்கும் சக்தி
இருக்காதா?

வாடைக் காற்றில் நனைந்து
நடுங்கியவளைச் சிறிதும்
சிந்திவிடாமல் சேர்த்தணைத்துத்
தன் உடம்பின் உஷணத்தை
ஊட்டினான் கலைவண்ணன்.

மீனவர்கள் ஆடை கழற்றிப்
பிழிந்து ஒருவரையொருவர்
துவட்டிவிட்டார்கள்.

விடிந்தது.

மழையில் நனைந்த இரவை
சூரியன் வந்து துவட்டி விட்டது.

தமிழ்ரோஜாவின் கைப்பை
திறந்துபார்த்ததில் பளிச்சென்று
மின்னலிட்டன கலைவண்ணன்
கண்கள்.

நாம் ஒரு கடிதம் எழுதிக்
கடலில் வீசினாலென்ன?

எப்படி எழுதுவது?

இதோ உன் கைப்பையில்
பேனாவும் குறிப்பேடும்...

இரண்டையும் வெளியில்
எடுத்தான்.

தமிழ்ரோஜா என்று எழுதிப்
பார்த்தான். எழுதியது.

சிறந்த யோசனை.
ஆனால், எப்படி
அனுப்புவது?

நம்மிடமிருக்கும் ஒரு
காலிப்புட்டியில்... கடிதத்தை
வைத்து நீர்புகாமல் இறுக
முடியிட்டுக் கடலில் அஞ்சல்
செய்வோம். கரைசென்று
சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு
கப்பலையோ
கட்டுமரத்தையோ
அடைந்தாலும் சரி

எல்லோரும் கூடிவிட்டார்கள்.
சரி... என்ன
எழுதுவது?

சென்னைக்
கடற்கரையிலிருந்து
வங்காளவிரிகுடாவின்
தென்கிழக்கே 40 முதல் 50
கிலோ மீட்டருக்குள் பதின்முன்று
நாட்களாய்ப் பழுதான படகில்
சிறையிருக்கும் தண்ணீர்க்
கைதிகள் நாங்கள். இது
கடற்பயணிகளின் கையில்
சேர்ந்தால் தயவுசெய்து
எங்களைக் காப்பாற்ற
வாருங்கள்.
கரையிலுள்ளவர்களின் கையில்
சேர்ந்தால் கருணைகொண்டு
காவல்துறை இயக்குநருக்குச்
சேர்த்துவிடுங்கள்.

எதற்கும் தமிழில் எழுதிவிட்டு
ஆங்கிலத்திலும் எழுதுவோம்.

சரியாகச் சொன்னாய்...
நன்றி தமிழ். நன்றி.

ஈரச்சட்டையை உயர்த்திப்
பிடித்துக் காற்றிலும் வெயிலிலும்
உலர்த்திக் கொண்டிருந்த
இசக்கி, பேனாக்காரரே.
எனக்கு ஒரு சகாயம்
செய்வீர்களா? என்றான்.

எல்லோர் பார்வையும்
அவன்பக்கம் திரும்பி
என்னவென்றது.

தாய்-என் தாய்-வாழ்வு,
வைத்துக்கொள்ள முடியாமலும்
சாவு, வாங்கிக் கொள்ள
முடியாமலும் தள்ளாடும் வயதில்
இருக்கும் என் தாய் -
அவளுக்கு ஒரே ஒரு சேதியை
இத்தோடு சேர்த்து
அனுப்பமுடியுமா?

பரதன் படபடப்பானான்.
உனக்கு மட்டும்தான்
சொந்தமா? நாங்களெல்லாம்
அநாதைகளா? எங்களுக்காக
அழுவதற்குக் கரையில் ஆளே
இல்லையா? பேனாக்காரரே.
நானும் சேதி சொல்ல
வேண்டும். எனக்கும் சேர்த்து
எழுதுங்கள்.

கலைவண்ணன் சற்றே மெளனம்
காத்தான். கண்களால் கண்கள்
படித்தான்.
பிறகு பேசினான்.
கடிதம் அனுப்பும் உரிமையும்
உறவும் நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு. ஆளுக்கொரு கடிதம்
எழுதுவோம். எல்லாவற்றையும்
மொத்தமாக அனுப்புவோம்.
இசக்கி இப்போது உனக்காக
எழுதுகிறேன். என்ன எழுத
வேண்டும் சொல்.

இசக்கியின் உணர்ச்சி -
கலைவண்ணன் வார்த்தைகளில்
கடிதமானது.

அன்புள்ள அம்மா
மேரி செல்லத்தாயி
அவர்களுக்கு. உன் மகன்
கடலுக்குள் இருந்து எழுதும்
கடிதம் இது. நடுக்கடலில்
படகு பழுதாகி உயிருக்குப்
போராடிக்
கொண்டிருக்கிறேன். உன்
வயதான முகத்தை எண்ணி எண்ணி
யாருக்கும் தெரியாமல் அழுது
கொள்கிறேன். விற்பனைக்குக்
கூறுகட்டி வைத்த மீன்களில்
ஒட்டும் ஈக்களை ஓட்டி ஓட்டி
ஓய்ந்துபோன அந்தக்
கைகளுக்கு மீண்டும் முத்தமிடும்
வாய்ப்பைக் கர்த்தர்
எனக்கருள்வாரா? ஒருவேளை,
நான் செத்துவிட்டால்,
தாயே... மீனவர் சங்கம்
வழங்கும் என் மிச்சச்
சேமிப்பில் நம் கூரைவீட்டுக்கு
ஓடு மாற்றிக் கொள்.

இப்படிக்கு,
இசக்கி

இசக்கி கண்ணீரைத் துடைத்துக்
கொண்டான். கலைவண்ணன் தன்
கண்ணீரை மறைத்துக்
கொண்டான்.

இப்போது பாண்டியின் கடிதம்
எழுதப்பட்டது.

என் அன்பு மனைவி
வரலட்சுமி. நீயும்
குழந்தைகளும் சுகமா?
என்னைப் பற்றிக்
கேட்கிறாயா? இந்தக் கடிதம்
எழுதப்படும் இந்த நிமிஷம்
வரை நான்
உயிரோடுதானிருக்கிறேன்.
கரைமீது எங்களுக்கு ஆசை.
எங்கள்மீது கடலுக்கு ஆசை.
எப்படியும் மீள்வோம் என்ற
நம்பிக்கையோடுதான்
இருக்கிறோம். எனக்காக அழ
வேண்டாம். ஒருவேளை, நான்
இறந்துவிட்டால் வளரும்
பிள்ளைகள் வளரும் வரை
அவர்களுக்கு நான் செத்த
செய்தி சொல்லாதே.
கடைசியில், ஒரே ஒரு
உண்மையை மட்டும் உனக்குச்
சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னை மன்னிப்பாயா? எனக்கு
வரும் நஷட ஈட்டுத் தொகையில்
ஒரு பகுதியை நம் வீட்டில்
வாழாவெட்டியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறாளே உன்
தங்கை கலா - அவளுக்கும்
பிரித்துக்கொடு. ஏனென்றால்
எனக்கும்... அவளுக்கும்...
அவ்வளவுதான் சொல்வேன்.
நான் சாவதற்காக
அஞ்சவில்லை. நான் செத்தால்
ஒரே வீடு இரண்டு
விதவைகளைத் தாங்குமா
என்றுதான் வருந்துகிறேன்.
என்னை மன்னிப்பாயா
வரலட்சுமி? மன்னிப்பாயா?

இப்படிக்கு,
பாண்டி

எல்லோரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது பரதனின்
உணர்ச்சிகள் தமிழாயின.

அன்புள்ள மீனா. என் ஆசை
மகளே. நீ பிறந்தது முதல்
உன்னைப் பத்து
நாட்களுக்குமேல்
பார்க்காமலிருந்தது
இப்போதுதான். ஒருவேளை,
உன்னை இனிமேல் பார்க்கவே
மாட்டேனோ என்று
பயமாகவும் இருக்கிறது. உன்
பிரசவத்திலேயே உன் தாயைப்
பறிகொடுத்த நான்
அப்போதே செத்திருப்பேன்.
ஆனால், உன் பிஞ்சுக்கைகளின்
உத்தரவுக்குத்தான் நான்
பிழைத்துக் கிடந்தேன்.

எனக்கு ஒரே ஓர் ஆசை
இருந்தது தாயே. அந்தத்
தகரப்பெட்டியில் நாப்தலின்
உருண்டைகளுக்கு மேலே மடித்து
வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின்
பழைய பட்டுப் புடவையை, நீ
வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன்
தாயைப் பார்க்க
ஆசைப்பட்டேன். என்
நியாயமான ஆசை
அநியாயமான கனவாகவே
அழிந்துவிடுமா? உன் தாயின்
பிரிவை நான் தாங்காதது
போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும்.
கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி
என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு
வாழ்வேன். என்னைக்
கடல்கொண்டால் உன்
தாயோடு சேர்வேன். படி
மகளே. படி. நம் இனத்தைப்
பரம்பரைத் துயரிலிருந்து
மீனவர்மகளே... மீட்கப்
படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல
உன்னை
உன் தாத்தா பாதுகாப்பார்
என்று நம்புகிறேன்.
ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே.
இருந்தால் - எவ்வளவு
வசதியாக இருக்கும்.

உன் அன்பு அப்பா,
பரதன்

கடிதத்தின் கடைசி வரியைச்
சொல்லமுடியாமல் விசும்பி
விசும்பி அழுத பரதனைக்
கட்டிக்கொண்டு ஆறுதல்
சொல்லவந்த பாண்டியும்
ஓவென்று அழுதுவிட்டான்.

சலீம். இப்போது உன்
முறை. என்ன எழுத
விரும்புகிறாய்? யாருக்கு எழுத
விரும்புகிறாய்?

அவன் விரக்தியாய்ச்
சிரித்தான்.

காற்று யாருக்குக் கடிதம்
எழுதப் போகிறது? நான்
அநாதை. எனக்கிருந்த ஒரே
ஓர் உறவு என் மனைவி.
அவளும் ஓடிப் போய்விட்டாள்.
இப்போது நான் எழுத
வேண்டுமென்றால் ஒரே
ஒருத்திக்குத்தான்.
தேநீர்க்கடை
சுப்பம்மாவுக்குத்தான்
எழுதமுடியும்.

எல்லோரும் நிமிர்ந்து
பார்த்தார்கள்.
சொல்கிறேன்
எழுதுங்கள். சலீமுக்காகக்
கலைவண்ணன் பேனா ஒரு
காதல் கடிதத்தை முத்தமிடக்
குனிந்தது.

அன்புள்ள சுப்பம்மா.
செளக்கியமா? சாவுக்குப்
பக்கத்தில் நானும்
செளக்கியமாயிருக்கிறேன்.
ஒரே ஒரு நம்பிக்கை - உன்
நினைவுதான். ஊருக்குத்
தெரியாத நம் சிநேகம்தான்
என்னை உயிர்வாழச்
சொன்னது. ஆனால், நான்
காதலிப்பது கடலுக்குப்
பொறுக்கவில்லை
போலிருக்கிறது. ஒரு
கோப்பைத் தேநீரை உன்னைப்
பார்த்துக் கொண்டே ஒரு மணி
நேரம் குடிக்கும் சுகம் இனி
வாய்க்குமா? உன் கணவனைப்
போலவே உன் காதலனும்
அகால மரணமடைய
வேண்டியதுதானா? இந்த
அலைகடலுக்கு மத்தியில் நான்
அழிய நேரும்போதும் என்
கடைசிச் சக்திகளையெல்லாம்
திரட்டி உன் பெயரை மட்டுமே
உச்சரிக்கப் பயன்படுத்துவேன்.
உன் பெயரை அலைகள்
கற்றுக்கொள்ளும். கரையில்
நின்று கேட்டுப்பார். ஓடிவந்து
மோதும் ஒவ்வோர் அலையும்
சலீமின் சார்பாக உன் பெயர்
சொல்லும். எனக்கான
துக்கத்தை ஒருவாரத்துக்கு
மேல் நீட்டிக்காதே.

காதல் என்பது எனக்கும்
புதிதல்ல. உனக்கும் புதிதல்ல.
என் ஞாபகத்தை எங்காவது
ஒரு முலையில் முடிந்துவிட்டு நீ
இன்னொரு வாழ்க்கை
தொடங்கு.

இப்படிக்கு,
உன் சலீம்.

சலீம். அழக்கூடத் தெரியாத
அப்பாவியே. உனக்குள் இப்படி
ஒரு வாழ்க்கையா?

அவன் உள்ளங்கைகளை
உறவோடு பற்றித் தாடி
முளைத்த கன்னம் தடவினார்கள்
மீனவர்கள்.

முடிந்தது கடிதம்.
இந்தக் கடிதத்துக்குக்
காலிபுட்டிதான் உறை.

எல்லாம் சரி.. இந்தத்
தபாலுக்குக் கட்டணம் கட்ட
வேண்டுமே...

கடல் தபாலுக்குக்
கட்டணமா?

இது யார் கையில்
சேர்ந்தாலும் அவர்கள் அதை
அலட்சியப்படுத்திவிடக்
கூடாதல்லவா.
கொண்டு சேர்ப்பவர்களுக்குக்
கூலிவேண்டாமா?

கூலியா? கூலிக்கு எங்கு
போவது?

எல்லாரின் சில்லறைகளையும்
திரட்டத் தொடங்கினார்கள்.
தொகுத்தபிறகும் ருபாய்
நூற்றுப்பதினேழு ஐம்பதுதான்
தேறியது.

இது போதாது என்று
உதடு பிதுக்கினான் கலைவண்ணன்.

யோசித்துத் தாழ்ந்த கண்கள்,
தமிழ்ரோஜாவின் விரலிலிருந்த
தங்கமோதிரத்தில் பட்டுத்
தெறித்தன.

காணாமல்போன குழந்தையை
மீண்டும் கண்டெடுத்த ஒரு
தாயைப் போலப்
பரபரவென்று அவள் கைபற்றிய
கலைவண்ணன் கழற்று.
உடனே கழற்று என்றான்.

அய்யோ. இது நீங்கள் என்
பிறந்த நாளுக்குப்
பரிசளித்தது -அவள்
வெடுக்கென்று கையிழுத்தாள்.

இன்னொரு பிறந்த நாள்
உனக்கு வேண்டுமா வேண்டாமா
- கழற்று அவன் கடிந்து
சொன்னான்.

மாட்டேன்...
மாட்டேன்...

அவள் முரண்டுபிடித்தாள்.
அவன் முயன்று பறித்தான்.

அந்த மோதிரத்தைப்
புட்டியிலிட்டுப் பூட்டினார்கள்.

அதில் நீர்புகாமல் இருக்க
உப்புத்தூள் கொண்டு வந்த
பாலிதீன் பை சுற்றிக் கயிறு
கட்டினார்கள்.
அதில் ஒவ்வொருவராக உதடு
பதித்து முத்தமிட்டார்கள்.

தமிழ்ரோஜா மட்டும் தன்
விரலைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்து விசும்பிக்
கொண்டிருந்தாள்.

அந்தக் கடிதத்தைக் கலைவண்ணன்,
பலம் கொண்ட மட்டும் கடலில் வீசினான்.
நீரலைகளில் அது மிதந்தது - மிதந்தது,
சற்று நேரத்தில் அவர்கள் பார்வையிலிருந்து
மறைந்தது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home