Friday, 8 February 2013

தோலின் ஈரத்தன்மையைப் பாதுகாக்க... To maintain wetness of the skin

To maintain wetness of the skin - Beauty Care and Tips in Tamil
கறுப்பாக இருப்பவர்களுக்கு குளிர்காலம் வந்தாலே இம்சைதான். அரிப்பெடுக்கிறதென்று சொறிந்தால்... உடலில் ஆங்காங்கே ஒரு உலக வரைபடமே உருவாகி விடுகிறது. மாநிறம், சிவப்பு நிறம் கொண்டவர்களும் பனியின் தாக்குதலில் சிக்கி முகத்தில் இருக்கும் தோல் உறிந்து சிரமப்படுகிறார்கள். இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம்... எவ்வளவு குளிராக இருந்தாலும், அப்போதுதான் பறித்த ஆப்பிள் பழம் போல... அழகாக தோற்றமளிக்கலாம்.

குளிர்காலங்களில் தோல் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க, தோலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் தரமான "கிரீம்களை" உபயோகிக்க வேண்டும். குளிக்கும் போது இயற்கையான முறைகளில் தயாரிக்கப்பட்ட நறுமணத் தைலங்களை நீரில் கலந்து குளித்தால் நாள் முழுவதும் வாசனையுடன் வலம் வரலாம். தோலின் ஈரப்பதத்தை பாதுகாக்கக் கூடிய குளியல் சோப்பையே உபயோகிக்க வேண்டும்.

குளிர் காலங்களில் நீண்ட நேரம் குளிப்பதால் தோல் உலர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. இதனால், சிறிது நேரத்தில் குளியலை முடித்துக் கொள்வது நல்லது. குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மாயிஸ்ரைஸர் பூசுவது நல்லது.

ஆசையாய் அணியும் சில வகை ஆடைகள் தோலின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். கம்பளியாலான ஆடைகளை அணிந்து இதனைத் தவிர்க்க முடியும். கம்பளி ஆடைகள் உடல் வெப்பத்தைப் பாதுகாத்து, தோலில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. அதிக அளவில் நீர் அருந்தியும், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்டும் தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டும். உலர்ந்த காற்றினால் தோல் பாதிப்படைவதைத் தவிர்க்க, வீட்டில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலைப் பனியினால் உதடுகள் வெடித்துப் புண்ணாகி விடுகின்றன. இதைத் தடுக்க பலவிதமான நறுமணங்களில் கிடைக்கும் "கிரீம்களை" தினமும் உதட்டின் மேல் தடவி வர வேண்டும். தூங்குவதற்கு முன் "பெட்ரோலியம் ஜெல்லியை" உதட்டில் தடவிக் கொண்டு தூங்கினால் இந்தப் பிரச்சினையே வராது.

கை முட்டிகள் மற்றும் முழங்கால் பகுதிகளில் இருக்கும் தோல், பனியின் தாக்குதலால் பாதிப்படைந்து புள்ளி புள்ளியாக காட்சியளிக்கும். எலுமிச்சம் பழத்தை தினமும் அந்த இடங்களின் மீது தேய்த்து, அதன் பின் "கிரீமைப்" பூசுவதன் மூலம் தோலை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், நன்றாக சுரண்டிய பின்... பாதங்களைப் பாதுகாக்கும் "கிரீம்களைப்" பூசி வர வேண்டும். பாதங்களை இதமாக "மசாஜ்" செய்து வருவதும் நல்லது.

குளிர்காலங்களில் தலையில் பொடுகு அதிகமாகி முடி கொட்டுதல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. இதனைத் தவிர்க்க, ஈரப்பதமூட்டும் ஷாம்புகளை உபயோகித்து நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். பொடுகு நீக்கும் ஷாம்புகளை உபயோகிக்க நேர்ந்தால், மிகக் கவனமான முறையில்... தரமான ஷாம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சில ஷாம்புகள் தலைமுடியின் இயற்கைத் தன்மையை அழித்து, அதன் வேர்களை பலமிழக்கச் செய்யும் சக்தி கொண்டவை.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home