ஜிம்மி'க்கு திராட்சை கொடுக்காதீங்க, உடம்புக்கு ஆகாது!
ஆசை ஆசையாய் கறி சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு எலும்பு துண்டுகளைப் போடுவார்கள். ஆனால் அது அவைகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். குழந்தைகளுக்கு நிகராக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உணவுகளைக் கொடுத்தால் மட்டுமே அவைகள் ஆரோக்கியமாக இருக்கும். எனவே என்ன உணவுகளைக் கொடுக்கலாம் என்பது பற்றி அவர்கள் கூறும் ஆலோசனைகளைப் படியுங்களேன். குழந்தைகளுக்கு நிகராக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை சில உணவுகள் அவைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே உணவு கொடுக்கும் போது சிலவற்றை தவிர்க்க வேண்டும்.
பூண்டு ஆபத்து
மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது பூண்டு. அதே சமயம் இது நாய்களுக்கு ஆபத்தானது. மிகச்சிறிய அளவிலான பூண்டுதான் விலங்குகளுக்கு ஜீரணமாகும். எனவே நாய்களுக்கு தயாரிக்கும் உணவுகளில் பூண்டை தவிருங்கள். அதேபோல் வெங்காயத்தில் உள்ள தையோ சல்பேட் விலங்குகளுக்கு ஆபத்தானது குறைந்த அளவு வெங்காயத்தை உட்கொண்டாலே நாய், பூனைகள் உயிருக்கு ஆபத்து.
சாக்லேட் வேண்டாம்
குழந்தைகளுக்கு சாக்லேட் மிகவும் பிடித்தமானது. ஆனால் இதில் உள்ள தியோபிரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதேபோல் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், குக்கீஸ் போன்றவைகளைக் கூட நாய்களுக்கு கொடுக்க கூடாது.
எலும்புத்துண்டு
சிக்கன், மட்டனில் உள்ள எலும்புத்துண்டு நாய்களுக்கு விருப்ப உணவு ஆனால் பெரிய அளவிலான எலும்புத் துண்டுகள் நாயின் ஜீரண உறுப்புகளை சிதைக்கக்கூடியவை. சில சமயம் நாயின் வாய் பகுதியில் மட்டிக்கொள்ளும் ஆபத்து உண்டு.
காய்ந்த பீன்ஸ் விதைகள்
உலர்ந்த விதைகளில் உள்ள ஹீமா குளுட்டனின் எனும் வேதிப்பொருள் செல்லப்பிராணிகளின் இரத்த சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதேசமயம் இவைகளை பறவைகளுக்கு உண்ண கொடுக்கலாம். அதேபோல் மக்காச்சோளத்தை நாய்களுக்கு உண்ணக் கொடுத்தால் ஜீரணக் கோளாரினை ஏற்படுத்திவிடும்.
பட்டர் ஃப்ரூட்
மனிதர்களுக்கு ஊட்டச்சத்தினையும், அழகினையும் தரவல்லது ஆவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட். இந்த பழத்தை சாப்பிடும் நாய்களுக்கு டயாரியா ஏற்பட வாய்ப்புள்ளது இதயபாதிப்பும் ஏற்படும். அதேபோல் திராட்சை சாப்பிட்டால் நாய்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படும்.
காபி கொடுக்காதீங்க
ஒரு சில நாய், பூனைகளுக்கு காபி கொடுப்பார்கள். இதில் உள்ள காஃபின், தியோஃப்ரோமின் நாய்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். நம்மை போல் நமது செல்லப்பிராணிகளும் குதூகலமாக இருக்கட்டும் என்று நினைத்து அவற்றுக்கு பீர் அருந்தக் கொடுத்தால் அவ்வளவுதான். அவைகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
Labels: செல்ல பிராணிகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home