Friday, 25 January 2013

பாரதியார் கவிதைகள் 1

 
லாஜ்பத்ராய் துதி
 
விண்ணகத்தே யிரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைத்து வந்து
கண்ணகத்தே யொளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலா மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே, லாஜபதி, யிடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரோ? ஒருமனிதன் றனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவற் கூறு செய்தல்
அருமையிலை; எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும் அந்த மேலான்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனித ரெண்ணற்றார் இவரையெலாம்
ஒட்டியெவர் வாழ்வ திங்கே?
பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பா லிரணியன்சேய்
செய்ததினா லவனுக் குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
டிற்பத்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ?


உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலினீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை போய்யாமோ?- இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்திக் காட்சி நித்தியமாம். 

நான்

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்
மண்ணிற் றிரியும் விலங்கெலாநான்
கானிழல் வளரு மரமெலாநான்
காற்றும் புனலுங் கடலுமேநான்.

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான்
வெட்ட வெளியின் விரிவெலாநான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான்
வாரியி லுள்ள வுயிரெலாநான்.

கம்ப னிசைத்த கவியெலாநான்
காருகர் தீட்டு முருவெலாநான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமேநான்.

இன்னிசைமாத ரிசையுளேனான்
இன்பத் திரள்க ளனைத்துமேநான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான்
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான்.

மந்திரங் கோடி யியக்குவோனான்
இயங்கு பொருளி னியல்பெலாநான்
தந்திரங் கோடி சமைத்துளோனான்
சாத்திர வேதங்கள் சாற்றினோனான்.

அண்டங்கள் யாவையு மாக்கினோனான்
அவைபிழை யாமே சுழற்றுவோனான்
கண்டநற் சக்திக் கணமெலாநான்
காரண மாகிக் கதித்துளோனான்.

நானெனும் பொய்யை நடத்துவோனான்
ஞானச் சுடர்வானிற் செல்லுவோனான்
ஆன பொருள்க ளனைத்தினு மொன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதிநான். 

தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்கமுண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவ னுரைத்தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா! 

மனமே

கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே.

தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்குந் தீமை பொங்கும் நலமே.

நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே.

தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர் பார்ப்பார் தவமே.

தவறா துணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home