Friday, 1 February 2013

சேனைக்கிழங்கு குருமா

Elephant Yam Kurma
குருமா என்றாலே உருளைக்கிழங்கு குருமா தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஏனெனில் அந்த அளவு அந்த உருளைக்கிழங்கு சுவையைக் கொடுக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை விட அதிக அளவில் சேனைக்கிழங்கு குருமா சுவையைத் தரும். ஆகவே இப்போது அத்தகைய சேனைக்கிழங்கை வைத்து எப்படி குருமா செய்வது என்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
சேனைக்கிழங்கு - 1/2 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 1 
கிராம்பு - 2 கல்
பாசி - சிறிது 
அன்னாசிப்பூ - 1 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
முதலில் சேனைக்கிழங்கின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 
 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய சேனைக்கிழங்கை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு, கசகசா போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து கிளற வேண்டும். பின்பு அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 
 
குருமாவானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். 
 
 இப்போது சுவையான சேனைக்கிழங்கு குருமா ரெடி!!! 
 
இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home