Saturday, 9 March 2013

முதல் ஸ்பரிசம்

 photo aadhi_zps26052626.jpg


இருபது வரை எண்ணிக்கொண்டு
இருள்பாரித்த சாலையை
நண்பன் போட்ட பந்தையத்தில்
கண்ணை மூடி கடக்கையில்
உன்னை மோதி அதிர்ந்தே போனேன்

கூச்சமும் அச்சமும் சினமும்
வழியும் விழிகளால் தான்
என்னை முதல்முறை நீ காண்பாயென‌
எண்ணியதே இல்லை

மகிழ்ச்சி தயக்கம் பயம் தவிப்பு என‌
எல்லாம் புரள‌
மொழியறியாத ஊரில்
ஊமையை போல அலையும் ஒருவனை
போல உன் முன்னிலையில் நிற்பேனென‌
கருதியதே இல்லை

ஒரு அழகான மயிலிறகாய் நாளும்
என் கனவின்
காற்று திசையில் பறந்தவளே
உன்னுடனான சந்திப்பு நிகழ்ந்த‌
இத்தருணத்தின் மலர்வில்
சாயமிழக்கிறது
செறிந்த தனிமை

இன்னும் தெரிவிக்காத‌
அல்லது நீ அறியாத‌
எனது பேரன்பின் வெளியில்
உனக்காகவே
துளிர்ப்பதற்கு காத்திருக்கிறது
எண்ணற்ற மழைகாலங்கள்

காய்தலற்ற பசுமையோடும்
வண்ணத்துப் பூச்சிகளின் பறத்தலோடும்
பனி படர்ந்த
குளிர்ந்த புல்வெளியை
உனக்காகவே
விரித்து வைத்திருக்கிறது மனது


மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான‌
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home