அனாதரவான வார்த்தை

திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துழாவி
அலைந்தது அந்த வார்த்தை..
ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..
பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...
மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..
கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..
குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..
இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..
Labels: ஆதி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home