Wednesday, 29 May 2013

சிக்கன் நிஹாரி

லக்னோவில் மிகவும் பிரபலமான சிக்கன் குழம்பு தான் சிக்கன் நிஹாரி. பொதுவாக நிஹாரியானது மட்டன் அல்லது மாட்டுக்கறியை வைத்து தான் செய்வார்கள். ஆனால் இங்கு அதற்கு பதிலாக, சிக்கனை சேர்த்து செய்கிறோம். 
 
இந்த சிக்கன் ரெசிபியில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் சிக்கனை வறுத்து, பின் குழம்பில் கோதுமை மாவை சேர்த்து சமைப்பது தான். சொல்லப்போனால், இது ஒரு வித்தியாசமான ஒரு சிக்கன் குழம்பு. 
 
இந்த வாரம் வீட்டில் இந்த சிக்கன் ரெசிபியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாமே! சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
delicious chicken nihari
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
பட்டை - 1 
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 
 
மசாலாவிற்கு...  
 
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் - 4 
கருப்பு ஏலக்காய் - 1 
கிராம்பு - 8 
மிளகு - 18 
பட்டை - 1 
பிரியாணி இலை - 1 
இஞ்சி பொடி - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
 முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை அனைத்தையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் 1 டீஸ்பூன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்கவிட வேண்டும். 
 
பின்பு வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அத்துடன் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்ட, உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, மீதமுள்ள அரை கப் தண்ணீரில் கோதுமை மாவை கரைத்து ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்க விடவும். 
 
பின்னர் மூடியை திறந்து சிக்கன் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு, அதனை இறக்கி விட வேண்டும். பிறகு மற்றொரு சிறு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் 1 டீஸ்பூன் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, அதனை இறக்கி வைத்துள்ள சிக்கன் குழம்பின் மீது ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் நிஹாரி தயார்!!! 
 
இதனை சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home