Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 6

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 6











செத்த நாள்

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லாம்....
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்....
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!


பாடு குயிலே!

புள்ளிச் சிறகடித்துப் பாடுகுயிலே! - தமிழன்
புதிது பிறந்தானென்று பாடுகுயிலே!
வெள்ளிக் குரலெடுத்துப் பாடுகுயிலே! - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

நேற்றுவரை உலகில் அஞ்சிநடந்தோம்! - பிறர்
நீட்டும் எலும்புகளை உண்டு கிடந்தோம்!
காற்றுத் திரும்பியது கண்டு மகிழ்ந்தோம் - ஒரு
கவிதை பிறந்ததென்று பாடுகுயிலே!

சாதிப் பிரிவினைக்குச் சாட்டை கொடுத்தோம் - தமிழ்ச்
சாதிக்கு மட்டுமிந்த நாட்டைக் கொடுத்தோம்!
வீதிக்கு வீதி மொழி வேட்கை படைத்தோம்! - விடி
வெள்ளி முளைத்ததென்று பாடுகுயிலே!

ஆளப் பிறந்தவர்கள் நாடு சமைத்தோம்! - எமை
ஆட்டிப் படைத்தவர்க்குப் பாடை சமைத்தோம்!
ஈழத் தமிழ்மனைக்குப் பாலம் அமைத்தோம்! - கவி
எண்ணம் பலித்ததென்று பாடுகுயிலே!

எட்டுத் திசைகளிலும் வெற்றி மகிழ்ந்தோம் - விண்ணின்
எல்லைதனிலே கொடிகட்டி மகிழ்ந்தோம்!
கொட்டும் முரசொடுகை தட்டிமகிழ்தோம் - இது
கொள்ளை மகிழ்ச்சி என்று பாடுகுயிலே! 
 
 

நில்லடா தம்பி!

முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்!
நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன!
காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்!
தேய்ந்த வீரம் திரும்பி வந்தது!
நில்லடா தம்பி! நெருப்பில் நீநட!
கொல்லும் சாவினைக் கூப்பிட் டழைப்பாய்!
போனாலும் உயிர் போய்த் தொலையட்டும்...
மானம் காத்து மண்டையைப் போடு!
தமிழன் நாட்டைத் தமிழன் ஆளும்
அமிழ்தப் பொன்னாள் இந்நாள் மலர்க!
வெள்ளமே! விரைந்துவா! விடுதலை
கொள்ளும் நாளைக் கொண்டு வருகவே! 
 
 

அந்நாள் எங்கே?

முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசி னோடு

கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு

படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்

நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?

தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!

தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!

மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!

பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!

வஞ்சத்தால் தமிழ்மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைக்க
வருவோர் தம்மை

நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த

நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை

அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?

வாள்தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்

கால்தொட்டு வாழ்கின்ற
கண்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்...

பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!

தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்டம்
தொடங்கு வோமே! 
 
 

உயிரைத் தூக்கி எறி!

காசி ஆனந்தன்
பொன்னால் ஆன தமிழைப்
பொருதும் உடலை முறி!
உன்னால் இயலா தெனில் உன்
உயிரைத் தூக்கி எறி!

மோதித் தமிழ்வாழ் வழிக்கும்
முரடன் உடலைச் சுடு!
நாதி இல்லை எனிலோ
நஞ்சைக் குடித்துப் படு!

பவளத் தமிழர் மண்ணை
பறிப்போன் உடலை மிதி!
அவனைக் கண்டஞ் சுவையேல்
ஆற்றிலேனும் குதி!

மறத்தின் தமிழர் மண்ணில்
மாற்றான் உடலைத் தொலை!
புறத்தில் ஒதுங்கு வாயேல்
போ! நீ செய் தற்கொலை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home