Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 19

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 19


நறுக்குகள் - மாடு

ஆயிரம்
ஆண்டுகள்
வண்டி
இழுக்கிறது...
கொம்பை
மறந்த
மாடு.


நறுக்குகள் - ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்
அழகு
நிலையத்தில்
எலும்புக் கைகளால்.


நறுக்குகள் - குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -
குப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -
அலுவலகம்.

நறுக்குகள் - இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...
என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.
தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?
வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

Labels:

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 18

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 18


புகழ்பாடு

களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! - தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு! மானமே தமிழனுயிர் அங்கம்! - தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! - தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்
தமிழன் உடற்குருதி சூடு! - தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? - தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

போர் முரசு!

தவளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு

கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்

சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! - வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் - புகழ்
பேண மறந்துவிட்டோம்! - இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!


தாயே!

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்

தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்
என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே
உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!
கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்
நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது
தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!
வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்....
வீரமேன் கொடுத்தாய் தேவி?
பாரம்மா.....முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்து

சேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே
பாரம்மா....மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை....வீதி
ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!
மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!
தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!
ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!
ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!


கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்...
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!


நறுக்குகள் - புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

Labels:

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 17

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 17


பாவலரே!

பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!
கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்
செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்
புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!
பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்
செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்
சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்
தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!
ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?
தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?
வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்
நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி
வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்
சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!


தோழரே!

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே! 
 
 

வீசுக புயலே

வீசுக புயலே! வீசுக புயலே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!

மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!

நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே! 
 
 

வீசுக புயலே

வீசுக புயலே! வீசுக புயலே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!

மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!

நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே! 
 
 

தோழி

நானோர் கனாக்கண்டேன் தோழி! - தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!

ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!

வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

Labels:

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 16

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 16


தமிழே! உயிரே!

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!
தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!
தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!
அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?
தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்
அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!
தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!
அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!


களம் வருவோம்!

போர் முரசோடு புறப்படடா! தம்பி!
புல்லர்கள் காதில் அறைந்து வைப்போம்!
பேரரசொன்று படைத்திடு வோமென்று பேட்டைக்குப்
பேட்டை முழங்கி வைப்போம்!

ஆளுக் கொருவன் தலைபறிப்போம்! தம்பி!
அணுவணுவாய் அவன் உடல் முறிப்போம்!
நாளுக்கு நாள் தமிழ் நாட்டை அழிப்பவன்
நாடகம் ஓய ஓர் நாள் குறிப்போம்!

மானம் விழுந்து துடிக்குதடா! தம்பி!
மறவன் கதைகள் விளைந்த மண்ணில்
ஈனம் விளைந்து கிடக்குதடா! இதை
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?

துள்ளி எழுந்து புறப்படடா! தம்பி!
தூய தமிழ்ப்படை ஒன்றமைப்போம்!
எள்ளி நகைக்கும் பகைவன் உடல்களை
எண்பது துண்டுகளாக்கி வைப்போம்!

மூவர் தமிழ்ப்படை அஞ்சுவதோ? தம்பி!
மூலையில் நம்மவர் துஞ்சுவதோ?
சாவை எதிர்த்து வலம்வருவோம்! தமிழ்ச்
சாதி பிழைக்கப் புறப்படடா! 

தமிழர் படை!

மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல
மானம் ஒன்றுதான் அடிப்படை!
வெறிகொள் தமிழர் புலிப்படை! - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை!

புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்!
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!

தமிழன் பண்பில் உருப்படி! - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி!
அமையும் தன்மை முதற்படி! - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு! - நீ
வேங்கை; மாற்றான் வெள்ளாடு!
சிறும் பாம்பை வென்றாடு! - கண்
சிவந்து நின்று போராடு! 

வா தமிழா!

முறங்கொண்டு புலியடித்தாள்
முன்பொருத்தி! அவள் முலையில்
இறங்கிய பால் குடித்தவனின்
இனத்தோனே! அட தமிழா!
மறங்குன்றிப் பொதி சுமக்கும்
மாடானாய்.... சி! பகைவன்
புறங்காலை நக்குகிறாய்!
போடா போ! செத்துப் போ!

என்ன பிறப்போ? அட நீ
ஏன் தமிழன் எனும் பெயரை
உன்னுடலுக் கிட்டாயோ?
உண்மையில் நீ தமிழனோடா?
என்னருமைத் தமிழனெனில்
எழு! பகைவன் உடல்பொழியும்
செந்நதியில் ஆடி எழு!
சிவந்த விழி கொண்டெழடா!

கைநெடுவேற் படை எங்கே?
கணை எங்கே? வில்லெங்கே?
மை நெடுவான் வரையெழுந்த
தோள் எங்கே? மறமெங்கே?
ஐயிரண்டு திசை மோதி
அகன்ற தமிழ் மார்பெங்கே?
வையகமும் வானகமும்
நடுங்க வலம் வா தமிழா!

மூத்தகுடி இராவணனை
முழுதுலகும் புகழ் குவித்த
போர்த்தமிழர் தலைமகனைப்
புலிப்பிறப்பைத் தமிழீழம்
காத்த நெடுங் குன்றத்தைக்
களிகொள்ள நினைந்தொருகால்
ஆர்த்தெழடா தமிழ்மகனே!
அமையட்டும் தமிழரசு! 

குமுறி எழடா!

உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்...
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?

மேடைத் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந் நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!

எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங் கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்!
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.

Labels:

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 15

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு  15


மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா! 
 
 

தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே! 
 
 

எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்! 
 
 

தமிழர் விடுதலை!

இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!

மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை!
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!

குப்பு றக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்! 

வாருங்கள்!

வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்! முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

Labels:

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 14

 கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 14


காலையும் களமும்

கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்! 

தமிழ்மேல் ஆணை!

தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை! 

எழுச்சி

தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்! 

பயணம்

நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை! 

பூத்தது விடுதலை!

புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!

Labels: