Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 18

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 18


புகழ்பாடு

களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! - தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு! மானமே தமிழனுயிர் அங்கம்! - தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! - தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்
தமிழன் உடற்குருதி சூடு! - தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? - தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

போர் முரசு!

தவளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு

கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்

சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! - வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் - புகழ்
பேண மறந்துவிட்டோம்! - இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!


தாயே!

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்

தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்
என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே
உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!
கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்
நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது
தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!
வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்....
வீரமேன் கொடுத்தாய் தேவி?
பாரம்மா.....முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்து

சேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே
பாரம்மா....மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை....வீதி
ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!
மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!
தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!
ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!
ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!


கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்...
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!


நறுக்குகள் - புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home