Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 15

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு  15


மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா! 
 
 

தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே! 
 
 

எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்! 
 
 

தமிழர் விடுதலை!

இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!

மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை!
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!

குப்பு றக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்! 

வாருங்கள்!

வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்! முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home