Saturday, 19 January 2013

திரும்பாத முத்தம்

 

இடப் படாத முத்தமொன்று  இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
 வந்தமர்ந்தபோது
 பனிக் காலத்தின் ஆயிரம்
 உறைந்த கண்கள்
 அதை உற்றுப் பார்த்தன  

 இடப்படாத அந்த முத்தம்
 தன் கூச்சத்தின்
 இறகுகளைப் படபடவென
 அடித்துக்கொண்டது  

 திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது  


அதற்கு
தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை  

நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்  

இடப்படாத அந்த முத்தம்
சட்டென திடுக்கிட்டு
எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்  

யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத
காதலின் ஒரு தானியத்தை
தற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன் 

இடப்படாத முத்தங்கள்
எதையுமே பெற்றுக்கொள்வதில்லை
எவ்வளவு தூரம் பறந்தாலும்
அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை  

அவை
பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன
பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன  

ஒரு வேளை
நீ அந்த முத்தத்தை
இட்டிருந்தால்
து முத்தமாகவே இல்லாமல்
போயிருக்கலாம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home