தலைப்பற்ற கவிதை

திறந்து உள்ளே
நுழைய முயலுகையில்
இழுத்து சாத்துகிறாய் மனதை
எல்லயற்ற மனதுக்கு எல்லை வகுகிறாய்
சுற்றுச்சுவர் எழுப்புகிறாய்
கதவு வைக்கிறாய்
யாரும் தாண்டி உள்வந்துவிடும்
சாத்தியங்கள் உணரும் தருணத்தில்
பலவீனங்களை கண்டறிய
பலகோண பரிசீலனை செய்கிறாய்
கூரையீட்டு மூட முடிவெடுத்து
கனத்த கம்பிகள் மேல் கலவை படர்த்தி
தடித்த மேல்தளம் அமைக்கிறாய்
தனித்த வெற்றறையின் புழுக்கத்தில்
உள்ளிருக்க இயலாமல்
கதவை திறந்து
அகமும் புறமும் வருவது போவதுமாய் இருக்கிறாய்
மிதமிஞ்சிய தனிமையின் கணங்களில்
தட்டப்படாத கதவுகளை திறந்து
யாரும் காத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாய்
யாரும் இல்லாததால் தொற்றிக் கொள்ளும் சோர்வில்
தொய்ந்து உள் திரும்புகிறாய்
யாரும் இருந்திருந்தால் தொற்றிக் கொண்டிருக்கும்
மகிழ்ச்சியென திட்டவட்டமாய் உரைக்கிறாய்
சுமக்க முடியாத உனது
தனித்த அறையை தூக்கி கொண்டு
ஊரூராய் போகிறாய்
கோவில் கோவிலாய் திரிகிறாய்
ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் குருஜி சொன்ன
அமுத மொழிகளின் உபயத்தில்
சுவரை கொஞ்சம் பேர்த்து
குளிர்சாதனம் பூட்டுகிறாய்
வெளிப்புறம் கேமிராக்கள் பொருத்தி
கணினி மூலம் கண்காணித்தவாறு
உட்புறமே அமர்த்து கொள்கிறாய்
வெளியே உன்னை யாரும் பார்த்ததாக
சொல்லுவதே இல்லை
Labels: ஆதி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home