Saturday, 9 March 2013

மெய்யறிதல்

 photo aadhi_zps26052626.jpg

வசைச் சொற்களால் ஏசலுற்ற தருணத்திலும்
கருந்துளையாய் சொற்களை உட்செமித்தவாறு
சூன்யமாய் இருந்தான் அவன்

பிறப்பித்தவர்களே
கனவு குழந்தைகளின் கழுத்தறுத்த சமயத்திலும்
சூழல் அப்படி செய்ய வற்புறுத்தியிருக்குமென்று
மற்றவர்களுக்கு சாதகமாய் வாதிட்டு
சமாதானம் செய்து கொண்டான் தன்னை

இடஞ்சுட்டாமல் அவன் மட்டுமே
பொருளுணரும்படியான குத்தல் பேச்சுக்களில்
ரத்தம் கசித்த போதினிலும்
சுமூகமாகவே ரணவாளிகளோடு உறவாடினான்

தன்னுடைய வெளியின் அளவை
மற்ற*வர்கள் முடிவு செய்ய முயற்சித்த தறுவாயிலும்
மிக நிதானமாகவே பேச்சுக்கள் நடத்தினான்

நீண்ட கரங்கள் கன்னத்தில் அறைந்த போதிலும்
குவிந்த உதடுகள் முகத்தில் உமிழ்ந்த போதிலும்
தாக்குறுதலின்
அவமானப்படலின்
வலியினது வீரியம் கனம் அடர்த்தி ஆழம் பற்றி
அமைதியாய் ஆய்வு செய்து குறிப்பெடுத்திருந்தான்

கவிதைக்கான அருந்தருணனொன்று
கலைக்கப்பட்ட போது
கடவுளின் முகமூடியை கழட்டி வீசி
பிடேட்டரின் கோர முகத்தோடு ஊளையிட்டலறி பாய்ந்து
பெரியவர் சிறியவர் பாராமல்
யாவரின் மனதையும் பிளந்து கிழித்த தருணத்தில்தான்
அவ*னது மெய்யான முகத்தின் விகாரத்தை
அவனே காண நேர்ந்தது

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home