Wednesday, 23 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 5

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 5


ஒன்றுபடு!

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு! 
 
 

உணர்ச்சி

என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி

சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி

என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!

பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே

சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்... அட மாற்றார்

கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!

நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே

கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!

புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?

தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே? 
 
 

தமிழீழத்தின் அழகு தனியழகு

தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு

கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!

கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!

குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!

கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!

கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!

தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்! வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்

எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!

ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!


எழுவாய் நீ நெருப்பாய்!

தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்! 
 
 

ஏன் இந்த நடிப்பு?

கைதட்டத்தானா உன் கை? - தமிழா!
கைதட்டத்தானா உன் கை?

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு? - அட!
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home