Friday, 1 March 2013

நெய்தல் - ஆதி


 photo aadhi_zps26052626.jpg

உன் கதுப்பை
தோள்களில் சாய்த்திருந்தாய்

உன் கன்னம் வருடி
உச்சந்தலை மோந்த பொழுதில்
நாணம் முகத்தில் விரவ‌
மேலே விரித்த விழிகளால்
எனைப்பார்த்தவாறு
நெருக்கமானாய்

பொட்டற்ற உன் நெற்றியில்
முத்தப் பொட்டிட்ட தருணத்தில்
சின்ன இதழ்கள் மெல்ல நெகிழ்ந்து
சிந்திய தாபங்களை
கைகளில் ஏந்தி
உன்னை இறுக அணைத்துக் கொண்டேன்

மீண்டும் என் தோள்களில்
சாய்ந்து
கோலவிரல்களால் என் மேல்
கோலம் போட‌
உன் பூமுகம் அள்ளி
என்ன என்றேன்

தீரா காதலின்
ஏக்க உணர்வெல்லாம்
குழைந்த மென்குரலில்
"எனக்கு உன் கூட‌
எப்பவும் இருக்கனும்"
என்றாய்

அந்த வார்த்தைகளில்
மேலும் ததும்பி
மீதமின்றி வழிந்துவிட்ட
என் முழுமையையும் திரட்டி
உன் இதழ் குளத்தில்
பாய்ந்து மீனானேன்
கிரங்கிய உன் விழிகளில்
நெளிய துவங்கின‌
வட்ட வட்ட அலைகள்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home