Sunday, 3 March 2013

குழந்தைக்கு தனி அறை...- children room

children room - Child Care Tips and Informations in Tamil
குழந்தை பிறக்கும்போது ஒரு குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்தக் குழந்தையை கவனித்துக் கொள்வதில் அந்த குடும்பத்தைச்சேர்ந்த அத்தனை பேருமே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.
அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவை என்பதை அவர்களாகவே தெரிந்து கொண்டு அதன் ஆசையை பூர்த்தி செய்வார்கள். இந்த அன்புக் குளிப்பாட்டல் எல்லாம் குழந்தைக்கும் ஒரு வயது வரைதான் முழுமையாக கிடைக்கிறது. குழந்தை நன்றாக நடந்து பேச ஆரம்பித்து அங்குமிங்கும் ஓடியாடி விளையாட ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான் குழந்தையை பராமரிப்பதில் பெற்றோர் தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்துவதில்லை.

ஆனால் குழந்தை மனவியல் வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?... ஒரு குழந்தை முற்றிலுமாக குழந்தைப் பருவத்திலிருந்து விடுபட்டு சிறுவர்-சிறுமியர் (10 வயது) என்னும் அந்தஸ்தை அடையும் வரை அக்குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளவேண்டும். அவர்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

சரி, குழந்தைகளுக்கு அப்படி என்ன தேவைப்படும்?
முதலில் குழந்தை விளையாடுவதற்கேற்ப ஒரு அறை அவர்களுக்கு இருக்கவேண்டும். அது பெரிதாகத்தான் அமைய வேண்டும் என்பதில்லை. மிகச் சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால் அது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.

அங்கே அவர்கள் மென் பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள், அலங்கரித்த கட்டில், வண்ண தலையணைகள், சிறிய மேஜை, பிளாஸ்டிக் நாற்காலி, சோபா, அலங்கார கலைப்பொருட்கள், சுவர் கண்ணாடி, இரவு விளக்கு, அழகிய குப்பைத் தொட்டி முதலியவை இருப்பது அவசியம். சுவர்களில் பளிச்சென்ற வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். (5 வயது குழந்தைக்கு மேல் என்றால் சற்று வெளிறிய நிறங்களை சுவர்களுக்கு பயன்படுத்துவது நல்லது) குழந்தைகள் தங்களது புத்தகங்களையும், துணிமணிகளை அடுக்கிக் கொள்வதற்கு அலமாரிகளும் இருப்பது நல்லது.
ஆண் குழந்தைகளுக்கு நீல நிறமும், பெண் குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு நிறமும் மிகவும் பிடித்தமானது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தரும் அத்தனை மென்பொம்மைகள் மற்றும் விளையாட்டு சாதனங்களிலும் இந்த நிறம் ஓரளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி குழந்தைகளுக்கு தனி அறையை ஒதுக்கும்போது அதற்குள் பெற்றோர் அவ்வப்போது சென்று அவர்கள் அந்த அறையை பராமரிக்கும் விதம், நோட்டு புத்தகங்களையும், துணிமணிகளையும் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்களா என்பதை நோட்டமிடுங்கள். பொருட்களை இறைத்துப் போட்டிருந்தால் அவற்றை ஒழுங்குப்படுத்தி வைப்பதற்கு பழக்குங்கள். குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டே இதைச் செய்யுங்கள்.

அப்போதுதான் அவர்கள் தங்களது பொறுப்பினை உணர்வார்கள். நீங்கள் அருகில் இல்லாதபோது அவர்களாகவே சீராக அடுக்கி வைக்கப் பழகுவார்கள்.
உங்களது வீட்டில் குழந்தைக்கு தாராளமான தனி அறை ஒதுக்க முடியும் என்றால் அந்த அறையில் கழிவறையும் சேர்ந்து இருப்பது போல் அமைந்தால் நல்லது. ஏனெனில் பெரும்பாலான குழந்தைகள் தங்களின் விருப்பம்போல் சுதந்திரமாக அதைப் பயன்படுத்த நினைப்பார்கள்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் அறை என்றால் ஆடியோ, டி.வி போன்றவற்றையும் அங்கே இணைக்கலாம்.

ஓவியம் தீட்டுதல், பூவேலைப்பாடு, கைவினைப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். நன்றாக பழகிய பின்னர் அவர்களையே சில பொருட்களை உருவாக்கும்படி கூறுங்கள்.
இப்படி தனியறையில் குழந்தைகள் இருந்தாலும் பெற்றோர்கள் அவர்களுடன் நேரத்தை செலவிட மறந்து விடக்கூடாது.

இந்தமாதிரியான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் நல்ல கற்பனை சக்தி கொண்டவர்களாக படிப்பில் ஆர்வம் கொண்டவர்களாகவும் வளர்வார்கள் என்று குழந்தைகள் மனவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home