Sunday, 3 March 2013

குழந்தைகள் புத்திசாலியாக வளர...- Intelligent Children

Intelligent Children - Child Care Tips and Informations in Tamil
ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும்.

குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல் தன்னம்பிக்கை வளரும்.

பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும். அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், "டியூசன்", அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, "டியூசன்" முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும். பின்னர் தூக்கம் வந்த பிறகும் "படி படி" என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும். காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.
குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி "டேக் இட் ஈஸி" என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும். நாம் தவறு செய்யும் போது "சாரிடா கண்ணா" என்று கூறினால் அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு "நன்றி" தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள். பல போட்டிகளில் பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் "ரிசலட்"டை வைத்து குழந்தை செல்ல வேண்டிய பாதையை வகுக்க முடியும்.

இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார். ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home