Wednesday, 17 April 2013

யாருமில்லாத இடத்தில்

எனதிந்தத் தனிமையை
யாருமறியாதவண்ணம்
என்னுள் ஒளித்து வைத்திருப்பதாய்
நம்பிக்கொண்டிருந்த வேளையொன்றில்
நீ கேட்கிறாய்
எப்போதும் ஏன் தனிமையிலிருக்கிறாய்
என்று

சலனமேயில்லாமல்
என் தனிமையின் துயரங்களைக்
கடந்து செல்பவர்களுக்கு மத்தியில்
என் நினைவில் நெடும் காலமாய்ப்
புதையுண்டிருக்கிற துயரங்களை
எழுப்பும் விதத்தில்
நீ கேட்கிறாய்
உனக்கு ஒரு பதிலை
உனக்காகவேனும்
சொல்ல முடியாத நிலையில்
நானில்லையென்றாலும்
முடிவுறாத குழப்பத்தினூடே சொல்கிறேன்
யாருமேயில்லாத இடத்தில்
தனியாகத்தானிருக்க முடியுமென்று

உயர்ந்த மலைகளுக்கிடையில்
யாரோ விட்டுச் சென்று அலைகழியும்
குரலாகவோ
அலை ஒதுக்கித் தள்ளிய
துரும்பாகவோ
நான் எனதிந்தத் தனிமையுடன்
மிக நிராதரவான நிலையில்தான்
தொடங்கிற்று
தனிமையுடனான எனதிந்த உறவும் கூட

எனதிந்தத் தனிமையின் மொழி
பிறிதொரு வேளையில்
கவிதையாய் மாறலாம்
எனதிந்தத் தனிமை
ஆகாய நீலத்தில் கரைந்து
தனக்கொரு நிறத்தை அடையலாம்
என்னை மீறித் தீர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை
தீரவே தீராத தனிமையுடன்
நான் இங்கேதான் இருந்து வருகிறேன்.

நடு இரவில்
பாதியில் தொடர இயலாக் கனவில்
மனம் வழி மறித்துப் பற்றியிருக்கும்
மிதக்கும்
எனது காலத்தின் சிறகுகளை
அவற்றின் வேகத்தை
மற்றும் அதன் எடையின்மையை
விரைவில்
நைந்து கிழிந்தே போகக்கூடும்
நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்
உன் ஞாபகங்கள்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home