பயணத்திற்குப் பிந்தைய வீடு
திரும்பும் வீடு எதிர்கொண்டு வரவேற்கிறது
சென்று வந்த நகரத்தின்
வன்முறையுடனும் சூழ்ச்சியுடனும்
அகோரப்பசியுடன் விழுங்கக் காத்திருக்கும்
ஒரு மிருகத்தைப் போல
வழி தவறாத பயணத்தில்
வந்து சேரும் வீடு
தயங்கவைக்கிறது
யாரோ ஒருவருடைய வீடு போல
நானும் அதுவும்
விரோதத்துடனும் சந்தேகத்துடனும்
பிந்தைய பொழுதுகளை எதிர்கொள்கிறோம்
கற்காலக் குகையொன்றின் தோற்றமாகவோ
சிறைச்சாலையொன்றின் சாயலாகவோ இல்லாமல்,
வீடு வீடாக இருப்பது
அதனுடன் தொடர இயலாத உறவாய் மாறி
மிகுந்த சங்கடத்தைத் தருகிறது
முதுகுகளுக்குப்பின் நீளும் ஆயுதங்களுடனும்
மௌன யுத்தங்களுடனும் தொடரும் உறவுகளின்
அதிகாலைப் பிரியங்கள்
தாழிடப்பட்ட அறைகளைக் காட்டிலும்
தாழிடப்படாத அறைகள் இயல்பாய் இருக்கின்றன
பதற்றங்களின்றி
எப்பொழுதும்
என் மனப் பிறழ்வுகள்
ஆரம்பமாவது
இந்த வீட்டின் ஒழுங்குகளுக்குள்
தனது எல்லா வர்ணங்களும்
உதிர்ந்துவிட்ட பிறகும்கூட
மயானத்திற் ஈடான அமைதியுடனும்
இறுமாப்புடனும் இருக்கிறது
என் வீடு
எப்போதோ பூட்டப்பட்டுவிட்ட
அதன் கதவுகளுக்குப்பின்
சாவிகளை வைத்துப்
பாதுகாப்புடன் விளையாடும்
நம் குழந்தைகள்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home