ஒரு மனநோயாளியென அறியப்படும் உன்னோடு
உன் செவிகளிடம் உரையாடுகிறாய்
இலக்கற்ற உன் பாதங்களினால்
நீ கணக்கிட முயல்வது
உனதறையின் நீள அகலங்களை
தூக்க மாத்திரியும் கைவிட்ட
உன்னைத் துன்புறுத்தும் நீண்ட இரவை
விளக்கொளியைப் பிரகாசிக்கச் செய்து
விடியவைக்கக்
கடும் பிரயத்தனம் செய்கிறாய்
எதிர்படும் முகமற்றவர்களிடமும்
நேரம் கேட்டுக்
காலத்தின் மீது
சிறு குறுக்கீடொன்றை
நிகழ்த்த முனைகிறாய்
காலை வேளைகளில்
தலையணைக்கடியில்
சுருட்டித் திணித்து நிரம்பிய
காகித உருண்டைகளைச்
சரிபார்க்கத் தவறுவதில்லை நீ
தனித்திருந்தபோதும்
பதுங்கிப் பதுங்கி
நடமாடுகிறாய் காலத்திடமிருந்து
சில நினைவுகளை
உருவி எடுப்பதுபோலப்
பாய்க்குச்சிகளை உருவிப்
பத்திரப்படுத்துகிறாய்
நெகிழ்ந்துகொண்டிருக்கிறாய்
என்கிற என் கற்பிதங்களில்
நிரம்பிக்கொண்டிருக்கிறது
உன் இறுக்கங்கள்
ஒரு மனநோயாளியென
அறியப்படும் உன்னோடு
இருந்துகொண்டிருக்கும் வேளைகளில்
கனத்துவிடும் என் வாதைகளுக்கு
உன்னிடத்தான கருணை மட்டுமே
காரணமெனச் சொல்லமாட்டேன்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home